புலிகள் மீண்டும் ஒன்றிணைவு, இந்தியாவில் பயிற்சி, முகாமும் கண்டு பிடிக்கப்பட்டதாம்!
விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மீண்டும் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் வெளியான செய்திகளில் மேலும் தெரியவருதில்,
இந்திய இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கூட்டாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. இதன்போது இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படவிருந்த முகாம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் உள்ள அனுதாபிகளால் இளைஞர்கள் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆயுதப் பயிற்சிகளை அடுத்து இலங்கைக்கு அனுப்பப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பயிற்சிகளை படையினர் தடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் அண்மையில் புலிக்கொடி ஏற்றப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிவசம்பு பிரசாந்தன் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சென்னையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தெரியவந்தன.
இந்த வலையமைப்பில் உள்ள இளைஞர்களை மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலையமைப்புகள் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று மேலும் ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் ஒன்று சேர்கிறார்கள் என்ற தகவலை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நிராகரித்துள்ளது.
0 comments
Write Down Your Responses