ஆசனூர் மலைப்பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ள புளிஞ்சூரை சேர்ந்தவர் சிவம்மா (வயது 45). இவரும் தலமலை கோடிபுரத்தை சேர்ந்த இப்ராஹீம் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இப்ராஹீம் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து சிவம்மா அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சிவம்மா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே நேற்று அவரது உறவினர்கள் சிவம்மா வீட்டுக்கு வந்தனர். அங்கு அவரை காணாததால் அக்கம்பக்கத்தில் சென்று தேடினர்.
அப்போது அங்குள்ள நாகராஜ் என்பவரின் சோளகாட்டில் சிவம்மா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையாளிகள் சிவம்மாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி சோளக்காட்டில் வீசி சென்றுள்ளனர்.
நேற்று முன் தினம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. கொலையாளிகள் பற்றி தகவல் கிடைக்கவில்லை.
ஆனால் சிவம்மா கணவரை இழந்த பின்னர் அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரிடம் தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவம்மா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலை குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி சம்பவ இடம் விரைந்து சென்றார்.
இதுபற்றி ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses