ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு மேலதிக சிக்கன நடவடிக்கைகளை விரும்புகிறது. By Peter Schwarz

பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 27 தலைவர்கள் பங்கு பெறும் உச்சிமாநாடு ஒரு முற்றுகைக்குட்பட்ட கோட்டையைப்போல் உள்ளது. இம்மாநாட்டில் பங்கு பெறுவோர் பலர் பதவியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளனர். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல சிக்கன நடவடிக்கைகளுக்கான பாரிய எதிர்ப்பு அவர்களுடைய அடித்தளத்தை இல்லாதொழித்துவிட்டது.

டிசம்பர் மாதம் சமீபத்திய இத்தாலிய தேர்தலில் கடுமையான தோல்விக்குப் பின் உத்தியோகபூர்வமாக இராஜிநாமா செய்துவிட்ட மரியோ மொன்டி இத்தாலியின் சார்பாக கலந்து கொள்கின்றார். ருமேனியா, பல்கேரியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதம மந்திரிகள் பதவிகளில் இருந்து வெகுஜன எதிர்ப்புக்களை ஒட்டி அகற்றப்பட்டுவிட்டனர். மொன்டியைப் போல் இவர்களும் இடைக்கால அதிகாரத்திலுள்ள அரசாங்கங்களுக்குத்தான் தலைமை தாங்குகின்றனர்.

போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் கிரேக்க அரசாங்கங்கள் கிட்டத்தட்ட நாளாந்தம் வெகுஜன எதிர்ப்புக்களையும், வேலைநிறுத்தங்களையும் எதிர்கொள்கின்றன. இதைத்தவிர, ஸ்பெயினின் மரியானோ ரஜோயின் அரசாங்கம் ஒரு ஊழல் அவதூறின் காரணமாக மதிப்பிழந்துபோயுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் செல்வாக்கு மே மாதம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இருந்த 55%ல் இருந்து இப்பொழுது 30% எனக் குறைந்துவிட்டது. இது ஒரு வரலாற்று பதிவாகும்.

இச்சூழ்நிலையில், ஜேர்மனிய அரசாங்கத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கூடியுள்ள தலைவர்களை பேரழிவு தரும் கொள்கைகளை தொடர உறுதியளிக்குமாறு கடுமையாக முயல்கிறது. அவ்வாறு நிகழாவிட்டால் தனி நாணயமும் ஐரோப்பிய ஒன்றியமுமே சரியக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

உச்சிமாநாட்டில் பங்கு பெறுவோருக்கு எழுதிய கடிதத்தில் ஐரோப்பியக் குழுவின் தலைவரான ஹெர்மன் வான் ரொம்பை இதுவரை செய்துள்ள ஐரோப்பிய பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் போதாது என்று பின்வருமாறு எழுதியுள்ளார். “எனவே, 2013ல் நாம் அடிப்படைச் சீர்திருத்தங்களை கடுமையாகத் தொடர வேண்டும்; அதுதான் ஐரோப்பியப் போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுத்து ஐரோப்பிய பொருளாதாரத்தின்மீது நம்பகத்தன்மையை வலுப்படுத்தும். இன்னும் அதிகம் செய்யப்படலாம், செய்யப்பட வேண்டும்.”

வான் ரொம்பையும் அவருடைய குழுவினரும் உச்சிமாநாட்டில் பல மணி நேரம் நீடிக்கும் திறந்த விவாதங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். இதில் தலைவர்கள் செய்யாமல்விடப்பட்டவைக்காக ஒருவரை ஒருவர் குறைகூறலாம். பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் அவருடைய நாடு இந்த ஆண்டு ஸ்பெயின் அல்லது அயர்லாந்தைவிட இன்னும் புதிய கடனை வாங்கும் என்பதற்கு பொறுப்புக் கூற வேண்டியுள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் அந்நாட்டில் மிக அதிகம் என கூறப்படும் தொழிலாளர் துறை, சமூகநலச் செலவுகளுக்காக குறைகூறப்படவுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோஸ் மானுவல் பரோசோவின் உரையைத் தவிர, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகியும் கூட்டத்தில் பேச உள்ளார். இவர்கள் இருவரும் ஐரோப்பாவின் மந்த நிலையில் உள்ள மோசமான பொருளாதார நிலைமை பற்றி உச்சிமாநாட்டிற்கு நினைவுபடுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தலைவர்கள் தொழிலாளர்களுடைய உரிமைகள் மீதும் சமூகநலச் செலவுகள் மீதும் புதிய தாக்குதல்களை தொடங்குவர்.

தொடரும் மந்தநிலையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகும் எதிர்ப்பும் குறிப்பாக ஜேர்மனிக்கும் பிரான்சிற்கும் இடையே ஆழ்ந்த மோதல்களைத் தோற்றுவித்துள்ளன. இந்த வேறுபாடுகள் கொள்கையின் அடிப்படைத் திசை பற்றி அல்ல. மாறாக செயல்படுத்தப்படும் வேகத்தைப் பற்றி என உள்ளது. அனைவரும் நெருக்கடி தாங்கள் அனைவரும் தங்கள் மட்டத்தில் ஒன்றிணைந்திருக்கும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர்.

நிதி மந்திரி Pierre Moscovici உடைய வார்த்தைகளில் பிரெஞ்சு அரசாங்கம் தற்போதைய கொள்கைகள் “ஐரோப்பா முழுவதும் சமூக, அரசியல் நம்பிக்கை இழப்பு என்னும் ஆபத்தைக் கொண்டுள்ளன” என்று எச்சரித்துள்ளது. இதற்கு வளர்ச்சி குறித்த ஊக்கங்கள் தேவை என்றார். பின், “மந்தநிலைக்கும் மேலே நாம் சிக்கன நடவடிக்கைகளை கொண்டுசெல்லக்கூடாது” என்றும் சேர்த்துக் கொண்டார். ஆனால் மறுபக்கத்தில் ஜேர்மன் அரசாங்கம் சேமிப்பு இலக்குகள் முழுமையாக அடையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

பிரெஞ்சு அரசாங்கம் தான் 2013 வரவு-செலவுத் திட்ட இலக்கைச் சந்திக்க இயலாது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மாறாக முதல் இலக்கான 3% புதிய கடன் என்பது இப்பொழுது 3.7% என கணிக்கப்பட்டுள்ளது. மந்த நிலையை அதிகப்படுத்தாமல் இருக்க அது கணிசமான கூடுதல் வெட்டுக்களையும் செயல்படுத்தாது. பத்து வயதிற்கு வந்தவர்களில் ஒருவரும், மூன்று இளவயதினரில் ஒருவரும் பிரான்சில் ஏற்கனவே வேலையின்மையில் உள்ளனர்.

ஆனால் ஜனாதிபதி ஹாலண்ட் தான் சிக்கனப் போக்கை தொடர இருப்பதாக வலியுறுத்தியுள்ளார். “சரியான பொருளாதார மூலோபாயம் பற்றாக்குறையை குறைக்கும் பாதையில் தொடர்ந்து செல்லுதலே, அது இல்லாவிடின் வளர்ச்சி வலுவிழந்துவிடும்” என்று டிஜோன் இன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஹாலண்ட் கூறினார். “இதுதான் ஐரோப்பிய ஆணையத்துடன் நான் நடத்திய உரையாடலின் சாரம் ஆகும்: அப்பாதையில் உறுதியாக நிற்கவேண்டும், அதற்கு கூடவும் இல்லை, குறைவாகவும் இல்லை” என்றார்.

ஆயினும்கூட அவர் ஜேர்மன் அரசாங்கத்தாலும் ஜேர்மன் மத்திய வங்கியாலும் தீவிரமாகத் தாக்கப்பட்டுள்ளார். Bundesbank இன் தலைவர் ஜென்ஸ் வைட்மான் பிரெஞ்சு அரசாங்கம் சீர்திருத்தங்களைத் தள்ளிவைக்க அனுமதிக்கிறது என்று குற்றம் சாட்டினார். “குறிப்பாக பெரிய நாடுகளில், புதிய [உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி உடன்பாடு] கடமைப்பாடுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சைகைகள் தேவை” என்றார் அவர்.

ஜேர்மனியில், செப்டம்பர் மாதம் மத்திய தேர்தல் நடக்க இருக்கையில், பழைமைவாத மற்றும் அரசாங்கத்தின் நவ-தாராளவாதக் கட்சிகளில் எவர் மிகவும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி எதிர்க்கட்சிகளான சமூக ஜனநாயக மற்றும் பசுமைக் கட்சிகளுடன் போட்டியிடுகின்றன.

முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் இன் முன்னிலையில், சமூக ஜனநாயகக் கட்சி சமீபத்தில் செயற்பட்டியல் 2010ன் -Agenda 2010- 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இதுதான் மிகப் பெரிய குறைவூதியப் பிரிவை தோற்றுவித்து, ஊதியத்தரங்களை பெருமளவு குறைத்துவிட்டது. சமூக ஜனநாயக கட்சியின் பாராளுமன்றத் தலைவர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் ஜேர்மனி இத்திட்டத்தினால் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றுடனான பெரும் போட்டியில் அனுகூலங்களைப் பெற்றது என்றார்.

அமெரிக்க தளமுடைய வங்கி JP Morgan Chase நடத்திய பகுப்பாய்வின்படி, யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, குறைந்த ஊதியங்களால் ஜேர்மனியின் உண்மையான பண மாற்று விகிதம் 16.4% குறைந்துவிட்டது. அதே நேரத்தில் பிரான்சின் விகிதம் 4.5% அதிகரித்துள்ளது. இதுதான் ஜேர்மன் ஏற்றுமதித் தொழிலின் வெற்றிக்குப் பின்னணியிலுள்ள காரணம் என அவ்வங்கி விளங்கப்படுத்தியது.

அரசாங்கத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஒவ்வொரு ஜேர்மன் கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் இந்த கீழே சரியும் அழிவுகரமான போட்டியை தொடர்வது என முடிவெடுத்துள்ளது. அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை என்று வரும்போது பெரிதும் உடன்பட்டுள்ளன என்ற உண்மை இருந்தாலும்கூட இதுதான் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெருகும் அழுத்தங்களுக்குக் காரணம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இதுவரை அழிவுகரமான சிக்கன நடிவடிக்கை கொள்கைகளை திணிப்பதற்கு இயலுமாக இருந்ததற்கான காரணம், இதற்கு எதிரான எதிர்ப்பு, சுயாதீனமான அரசியல் வெளிப்பாட்டை காட்டமுடியாததாலாகும். இதற்கு காரணம், தொழிற்சங்கங்களும் போலி இடது கட்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஒரு சில விமர்சிக்கும் வார்த்தைகளால் பாதுகாத்து, அதற்கு எதிரான சமூக எதிர்ப்பை ஆபத்தில்லாத திசையில் திருப்பிவிடுவதாலாகும்.

இத்தாலியில் நகைச்சுவை நடிகர் பெப்பே கிரில்லோவின் ஐந்து நட்சத்திர இயக்கம், மொன்டி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பால் பலன் அடைந்துள்ளது. ஏனெனில் அவை கம்யூனிஸ்ட் கட்சியின் பின் தோன்றிய அனைத்து அமைப்புக்களின் ஆதரவையும் கொண்டுள்ளது. கிரில்லோ வெற்றி பெற்றுள்ளதற்குக் காரணம் அவருடைய கடுமையான வாதங்கள் நடைமுறை அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தாக்குவதாலாகும். அதே நேரத்தில் அவர் ஒரு மிக பிற்போக்குத்தன பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக உள்ளார். (பார்க்கவும்- “The political significance of Beppe Grillo's Five-Star Movement”)

கிரேக்கம் மற்றும் ஹங்கேரி போன்ற மற்ற நாடுகளில், “இடது” எனப்படுபவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் பாசிச இயக்கங்கள் கணிசனமான செல்வாக்கைப் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களோ, போலி இடது அமைப்புக்களோ ஐரோப்பாவில் சமூக அழுத்தங்கள் வெடிப்புத்தன்மையுடைய வடிவங்களுக்கு வளர்ச்சி அடைவதைத் தடுத்து நிறுத்த முடியாது. இப்பொழுது மிக முக்கியமான பணி சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பிற்கு ஒரு முற்போக்கான முன்னோக்கினை வழங்கி, ஐரோப்பாவின் தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்படுத்தும் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியைக் கட்டமைப்பதுதான்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News