மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது பொலிஸ் தடை உத்தரவு அமுல்!
பஸ்சில் மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வலியுறுத்தி, டெல்லியில் விடிய விடிய போராட்டம் நடத்தியவர்களை போலீசார் இன்று(23.12.2012) காலை அப்புறப்படுத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரள்வதை தடுக்க இந்தியா கேட்,7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதடன் டெல்லியில் போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போராட்டக்காரர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு திடீரென சந்தித்து, ‘குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடும் தண்டனை வழங்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பஸ்சில் மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்கியதையடுத்து போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு,தண்ணீர் பீய்ச்சி அடித்தும் மாணவர்கள் கலைக்க முயன்ற போதும் கலைந்து செல்லாததால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பரபரப்பான சூழ்நிலையில், இன்று அதிகாலை 6.30 மணிக்கு ரெசினா ஹில்ஸ் மற்றும் சோனியா வீட்டுக்கு அருகே சில பஸ்களுடன் போலீசார் வந்து "டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பொது இடத்தில் 4 பேருக்கு மேல் ஒன்றாக இருக்கக் கூடாது. உடனடியாக கலைந்து செல்லுங்கள். போராட்டம் நடத்துபவர்கள் ராம்லீலா மைதானம் அல்லது ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்லுங்கள். இந்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று எச்சரித்தனர்.
ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவு வாயில், பிரதமர், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ள வடக்கு தெற்கு பிளாக் சாலைகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிக்கான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



0 comments
Write Down Your Responses