எமது உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் உண்ணும் உணவுக்குமிடையே நிறையத் தொடர்புண்டு. தேவையான உணவு வகைகளை உண்ணாது விட்டாலும் தேக ஆரோக்கியம் குன்றிவிடும். அதே வேளை தேவைக்கு அதிகமாக உண்டாலும் தேக நலன் பாதிக்கப்படும். எமக்கு என்னென்ன உணவு வகைகள் தேவையோ அவற்றை தேவையான அளவில் மட்டும் உண்ண வேண்டும். இதன் மூலம் நாம் சுகதேகியாக வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டுகிறது.
இன்று பரவலாக பெருகிவரும் தொற்றா நோய்கள் தொற்று நோய்களையெல்லாம் பின்தள்ளி மனிதரை வதைக்கின்றன. அதிக மரணங்களை இதய நோய்களும், பக்கவாதமுமே இன்று ஏற்படுத்துகின்றன. அடுத்து புற்றுநோயும், நீரிழிவு உயர் குருதி அமுக்கமும் அதிகரித்து வருகின்றன.உடற் பருமனுக்கும், பரவா நோய்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. வறுமை, பசி, பட்டினி காரணமாக ஒரு சாரார் போதியளவு நிறைவான சமசீர் உணவை உண்ணாமையால் உடல் மெலிந்து காணப்படுகின்றனர். போஷாக்கு குறைபாட்டு நோய்கள் ஒரு புறமும், நோயெதிர்ப்பு சக்தி குறைவடைவதனால் தொற்று நோய்கள் மறுபுறமுமென இவர்களைப் பீடிக்கின்றன.
இன்னொரு புறம் இன்னும் சிலர் தேவைக்கு அதிகமாக கண்டகண்ட உணவு வகைகளை உண்பதாலும், சமச்சீரற்ற முறையில் உண்பதனாலும் உடற்பருமனுற்று நோய்வாய்ப்படுவார்கள். இவர்கள் கூடுதலான சீனிச்சத்து நிறைந்த உணவுகளையும், கொழுப்பு எண்ணெய் நிறைந்த உணவுகளையும், தேவைக்கதிகமான உப்பையும் உட்கொள்வதனால் பல தொற்றா நோய்கள் இவர்களைப் பீடிக்கின்றன. இவற்றோடு மது, சிகரட் பாவனையும் சேர்ந்து இவர்களை நிரந்தர நோயாளராக்கி விடுகிறது.
ஒரு காலத்தில் மாரடைப்பு, நீரிழிவு முதலான நோய்கள் வயது வந்தவர்களுக்குத் தான் வரும் என்ற நிலை மாறி இன்று இளைய தலைமுறையினரையும் கூடுதலாக பாதிக்கின்றது. உலக மயமாதலும், விளம்பரமும், சர்வதேச சந்தையில் வந்து குவியும் எண்ணற்ற தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும், பானங்களும் இள வயதிலேயே உடல் பருமனை அதிகரிக்க வைத்து அழகான உடல் கட்டமைப்பையும் கெடுத்து நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது.
இதனை அடுத்து தமது உடற் பருமனைக் குறைக்கவென உணவைக் கட்டுப்படுத்த வெளிக் கிடும் போது சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஏற்பட்டு மறுவளமாக நோயெதிர்ப்புச் சக்தியையும் குறைத்து தொற்று நோய்களுக்கும் இட்டுச் செல்கின்றது.இன்றைய தலைமுறையினர் பலரும் ஃபாஸ்ற்பூட் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இயற்கையாக வீட்டில் சமைத்த உணவை உண்பதைக் குறைத்து வருகின்றனர். சிலர் மரக்கறி, இலை வகைகளை உண்பதே இல்லை. பழங்களையும் சாப்பிடுவதில்லை. இதனால் நார்ப் பொருட்கள் உணவில் குறைவடைந்து சமிபாடு பாதிக்கப்படுவதுடன் தேவையான விற்றமின்கள், கனியங்கள் கிடைக்காமல் போகின்றன. இன்னும் சிலர் கூடுதலான பொரித்த உணவுகளையும் எண்ணெய் சேர்த்த உணவுகளையும், அதிகமான கொழுப்பு நிறைந்த மாமிச உணவு வகைகளையும் தினந்தோறும் உட்கொண்டு உடற்பருமன் அடைகின்றார்கள்.
இன்னும் சிலர் குளிர்பானங்கள், ஐஸ்கியம், சொக்லெட் இனிப்பு வகைகளை கூடுதலாக எடுப்பதுடன் அடிக்கடி கோப்பி, தேநீர் என்பவற்றையும் அருந்துகிறார்கள். இதனால் தேவைக்கு அதிகமாக சீனிச் சத்து சேர்கிறது. சக்தி வழங்கும் கலோரிக்கு மேலதிகமாக நாம் எடுக்கும் சீனி மற்றும் கொழுப்பு எரிக்கப்படாமல் உடலில் ஊழிச் சத்தாக தேங்குகிறது.
இன்னும் சிலர் உப்பை தேவைக்கு அதிகமாக உண்பதனால் உயர் குருதி அமுக்கம் உட்பட பல நோய்களுக்கு உள்ளாகின்றார்கள். இதையே நம் முன்னோர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறியுள்ளார்கள். இன்னும் சிலர் பால் குடிப்பதில்லை. அது மாத்திரமன்றி தினமும் எமது உடலுக்குத் தேவையானளவு தண்ணீர் குடிப்பதில்லை. எமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் ஆனது. அது மாத்திரமன்றி இரத்தச் சுற்று, கழிவகற்றல் உட்பட பல உடற் தொழிற்பாடுகளுக்கும் நீர் தேவையானதாகும்.
எமது முன்னோர் எமது உணவு உட்கொள்ளும் முறைபற்றி குறிப்பிடும் போது எமது இரைப்பை கால்வாசிக்கு சாப்பிட்டால் போதுமானது என்கிறார்கள். தண்ணீர் அரைப்பங்கு அருந்துவதுடன் மீதி கால்ப்பங்கை வெற்றிடமாக வைத்திருப்பது நல்லது. இது சமிபாட்டையும் சீராக்க உதவும்.அதிக உறைப்பாக உணவுகளை தயாரித்து உண்பதும் உகந்ததல்ல. இது குடற்புண்கள் மற்றும் சில நோய்களுக்கு வித்திடலாம். போத்தலில் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளை விட எப்பொழுதும் உடன் தயாரித்த உணவுகளே சிறந்தவை. அடுத்து நாம் உண்ணும் உணவுகளுடனோ, நீருடனோ நோய்க்கிருமிகள் உடலுக்குச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் உடன் சமைத்த உணவு வகைகளையும் கொதித்து ஆறிய நீரையுமே அருந்த வேண்டும்.
போத்தலில் அடைத்து வரும் தண்ணீர் பரவாயில்லை. எமது சமையல் பாத்திரங்கள் மட்பாண்டங்களாக இருப்பது சிறந்தது. உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவுகளுடன் உடலுக்குத் தேவையற்ற உலோகங்கள் உட்செல்கின்றன. இவை நோய்களுக்கு இட்டுச் செல்கின்றன. எப்போதும் விறகு அடுப்பில் சமைப்பது ஆரோக்கியமானது மின் அடுப்புக்கள் பெற்றோலிய வாயு அடுப்புக்களில் சமைக்கும் போது உணவுடன் தேவையற்ற தீங்கான பொருட்கள் உடலில் சேர்ந்து நோய்களை உருவாக்கு கின்றன.
கிராமிய வாழ்வில் எப்போதும் உடன் மரக்கறி, மீன், இறைச்சி வகைகளை உண்ட ஒரு காலம் இருந்தது. அப்போது மனிதருக்கு நோய்களும் குறைவு. இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. சேமித்த உணவு வகைகளில் இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் பல தீமைகள் ஏற்படும் சாத்தியமுண்டு. காலாவதியானால் பழுதடையும் என்பதால் அவதானம் தேவை.
தயாரிப்புக்கள் எல்லாம் நம்பகரமானவை அல்ல. இலகுவான சமையல் சாப்பாடு என்பதற்காக இன்றைய அவசர உலகில் பலரும் இயற்கையான உணவைப் பின்தள்ளி விட்டு நவீன தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை உண்கிறார்கள். இன்னொரு விடயம் வீட்டில் தயாரிக்கும் உணவைப் போல் கடையில் தயாரிக்கப்படுகின்ற உணவுகள் நம்பகரமானவை அல்ல. ஈ, கரப்பான் முதலான நோய்காவிகள் சமைத்த உணவைத் தாக்காதவாறு பாதுகாப்பதும் அவசியம்.
உணவு உண்ணும் போது சுத்தத்தையும் பேணுவது அவசியம். உண்ணும் பாத்திரங்கள் துப்புரவானதாக இருக்க வேண்டும். சாப்பிட முன்னர் எமது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். சவர்க்காரம் போட்டுக் கழுவுதல் நன்று. இரவு உணவின் பின்னர் பல் துலக்குவதும் அவசியம். சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்பது தீமை பயக்கும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தம் மற்றும் உணவுகள் பற்றி அறிவுறுத்த வேண்டும்
சரியான உணவுப் பழக்கத்திலேயே நிறைவான உடல் ஆரோக்கியம் தங்கியுள்ளது
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results


0 comments
Write Down Your Responses