கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் தமிழ் பெண்கள்! – பரபரப்பு தகவல்கள்

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையச் சோதனையின்போது பிடிபட்டிருக்கிறார்கள் 30 பெண்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடைய பாஸ்போர்ட்கள் ஒரிஜினல் என்றாலும் அதிலிருந்த சில முத்திரைகளைச் சோதித்தபோது அந்த முத்திரைகள் போலியென்று தெரிய வந்ததும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். தமிழகம், கேரளம், ஆந்திரா மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இதில் அடக்கம்.

வேலைகளுக்காக இவர்கள் வளைகுடா நாடான ஓமனுக்குக் கிளம்புவதற்கு முன்பு பிடிபட்டிருக்கிறார்கள். இதையொட்டி இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகச் சில ஏஜெண்டுகளைக் கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.

இது ஏதோ ஒரு நாளில் மட்டும் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல. இதன் பின்னால்தான் எவ்வளவு அதிர்ச்சியூட்டும் பின்னணி? “சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் போவதாகச் சொன்னாலும் பெரும்பாலானவர்கள் அங்கு போனதும் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமை ஸ்தாபனங்களிடமும் பதிவாகியுள்ளது.

பணம் தாராளமாகக் கிடைக்கும் என்று நம்பி எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாடுகளுக்குக் கிளம்பும் பெண்கள் அங்கு போனதும்தான் இதை உணர்கிறார்கள். அதிலிருந்து விடுபடுவதற்குள் பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள்.

அதனால்தான் தனியாகவோ, கும்பலாகவோ வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களை விசாரிக்கிறபோதுதான் சிலர் மாட்டுகிறார்கள்”
என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.

தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இம்மாதிரியான பெண்களைத் தேர்வு செய்து அனுப்புவதற்கென்றே ஏஜெண்டுகள் பரவலாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை எப்படியோ வெளிநாட்டுக்கு விமானத்தில் ஏற்றி விடுவதோடு அவர்களுடைய கடமை முடிந்து, அவர்களுக்கு அதற்குரிய கமிஷனும்
வந்து விடுகிறது.

ஆனால் வெளிநாடுகளுக்குப் போய்ச் சேரும் பெண்கள் என்ன ஆகிறார்கள்? பெரும்பாலும் டூரிஸ்ட் விசா மூலமாகத்தான் இந்தப் பெண்கள் வளைகுடா
நாடுகளுக்குள் நுழைகிறார்கள். இதற்கும் அங்குள்ள யாராவது ‘ஸ்பான்சர்’ பண்ணினால்தான் விசா கிடைக்கும்.

இதன்படி டூரிஸ்ட் விசாவில் வருகிறவர்கள் அதிகபட்சமாக ஒரு மாதம்வரை தான் அங்கு தங்க முடியும். அதற்கு மேல் அங்கு தங்குகிற ஒவ்வொரு
நாளுக்கும் 10 ரியால் (அதாவது சுமார் 1200 இந்திய ரூபாய்) அபராதமாகக் கட்டியாக வேண்டும்.

கட்டாவிட்டால் நேரே அங்குள்ள சிறைதான். வளைகுடா நாடுகளான ஓமன், துபாய் போன்ற நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும்,
அதையெல்லாம் தாண்டி பெண்களைப் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்துவதற்கென்றே தனிக் கும்பல் இருக்கிறது.

நேரே இந்தக் கும்பலின் கையில் இந்தப் பெண்கள் சிக்கிவிடும்போது மொழி தெரியாத நிலையில் இவர்களால் சுலபமாகத் தப்பிவர முடிவதில்லை.

கட்டுப்பாட்டிற்குப் பெயர்போன துபாயில் இந்தியப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடத்தும் இடங்கள் இருப்பதை வருத்தத்துடன்
சொல்கிறார்கள் அங்கு வேலை பார்க்கம் தமிழர்கள்.

“எல்லாம் பகிரங்கமாக நடக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஏஜெண்டுகள் மூலம் வரவழைக்கப்படுகிறார்கள். இங்கு வந்து இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அழும் பெண்கள் கூட ஒரு மாத காலத்திற்குள் வேறு வழியில்லாமல் இதற்குப் பழகிவிடுகிறார்கள். அந்தக் கும்பலாகப் பார்த்து விடுவித்தால்தான் சொற்பப் பணத்துடன் இவர்கள் சொந்த ஊருக்குப் போய்ச் சேர முடியும்” என்கிறார் துபாயில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்.

வளைகுடா நாடுகளில் வெளிவரும் ‘கல்ஃப் நியூஸ்’ ஆங்கிலப் பத்திரிகையில் வந்த ஒரு செய்திக் கட்டுரை தென்னிந்தியாவிலிருந்து சென்ற பெண்கள் அங்கு பலவிதமான சிரமங்களைச் சந்திப்பதையும், பாலியல் தொழிலில் இருக்கும் பலவந்தமான சூழ்நிலையையும் வெளியே கொண்டு வந்தது.

அதில் கேரளாவிலிருந்து ‘வீட்டு வேலை’ என்கிற பெயரில் துபாய்க்கு அழைத்துவரப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பிறகு கைதாகிச் சிறைக்குப் போய் விடுதலையான இரு பெண்களின் பேட்டி வெளியாகியிருந்தது. “ஏஜெண்டுகள் அங்கு சொன்னது ஒன்று. இங்கு வந்ததும் நடந்தது வேறு. எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள்.

இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” என்று கண்கலங்கப் பேசியிருந்தார்கள் அந்தப் பெண்கள். வளைகுடா நாடான ‘ஓமன்’ தலைநகரான மஸ்கட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தியப் பெண்களைக் கொண்டுவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கென்றே பிரத்யேகமாக சில இடங்கள் இருக்கின்றன.

இந்தியாவிலிருந்து மட்டும் இங்கு வந்து குடியேறி தொழில் அல்லது வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மட்டும் இரண்டரை லட்சம் பேர். இந்தியாவிலிருந்து பெண்கள் ‘வீட்டு வேலை’என்கிற பெயரில் அழைத்து வரப்பட்டு உபயோகிக்கப்படுவது இவர்களுக்குத் தெரிந்தும் ‘நாங்கள்
ஒன்றும் செய்ய முடிவதில்லை’ என்று கைவிரிக்கிறார்கள்.

முறையான விசா இல்லாததே பெரிய குற்றமாகக் கருதப்படுகையில் அங்கு சென்று பாலியல் தொழிலில் (ஈடுபடுத்தப்பட்டாலும்) ஈடுபடுவது கூடுதல் குற்றமாகக் கருதப்பட்டு வளைகுடா நாடுகளில் உள்ள சிறைக்குப் போய் கஷ்டப்பட வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது இந்தப் பெண்களுக்கு.

இந்தியத் தூதரகம் தலையிட்டு இவர்கள் விடுதலையாகி, இந்தியா திரும்புவதற்குள் பலருக்கு உயிர் போய்விட்டுத் திரும்பி வந்த மாதிரியான நிலைமை. பத்து மாதங்களுக்கு முன்பு ஓமனில் உள்ள தொழிலாளர் துறை நடத்திய சோதனையில் முறையான விசா இல்லாமல் பிடிபட்டுச் சிறைக்குப் போனவர்கள் மூவாயிரம் பேர். இவர்களில் ‘பாலியல் தொழிலில்’ ஈடுபட்ட பெண்களும் அடக்கம்.

இவ்வளவு அவஸ்தைகளுக்குப் பிறகும் இந்தப் பெண்கள் கையில் சில ஆயிரங்களுடன் மட்டுமே வீடு திரும்ப முடிகிறது. இன்னும் சிலர் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற மனநிலையில் கையில் பணமில்லாத நிலையில் ஊர் திரும்புகிறார்கள். இதுதான் அங்குள்ள நிலைமை.

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இளம் பெண்கள் போய் ஏமாந்து திரும்பினாலும், இந்த வலையில் இவர்களைச் சிக்கவைக்கும் ஏஜெண்டுகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுக்கப்பட்டாலும் இவர்கள் இன்னும் எப்படித் தொடர்ந்து செயல்பட முடிகிறது? வெளிநாடுகளுக்குப் போகும் தமிழகத் தொழிலாளர்களைப் பற்றிய ‘சர்வே’யை எடுத்திருக்கும் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் சொன்ன தகவல் இன்னும் அதிர வைக்கிறது.

“இந்தியத் தூதரகத்துக்கு அங்கு பெண்கள் கொண்டு போகப்பட்டு படுகிற சிரமங்கள் நன்றாகத் தெரியும். அவர்களும் எச்சரிக்கிறார்கள். இருந்தும் அதையும் மீறிப் பெண்களைப் பல வழிகளில் அனுப்புவது தொடர்கிறது.

தர்மபுரி, சேலம் பகுதிகளில் இளம் வயதில் விதவையான பெண்களைத் தேர்ந்தெடுத்து அங்கு அனுப்பிப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.

அதோடு அங்கு போய்த் தப்பித் தவறிக் கர்ப்பமடைந்துவிட்டால் சட்டரீதியான சிக்கலைச் சந்திக்க வேண்டியிருப்பதால் சில பெண்களை அவர்களுடைய கர்ப்பப்பையை அகற்றிவிட்டு அனுப்புகிற கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?” என்கிறார் அவர்.

இது அதிர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குப் பயணப்படத் தயாராகிக் கொண்டிருக்கையில் யாரை உஷார்ப்படுத்துவது?

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News